Monday, February 06, 2006

A.R.ரஹ்மானின் பிறந்தநாள் பரிசு

திலீப் குமாராக இருந்து இசைப்புயல் A.R.ரஹ்மானாக மாறியவரின் வாழ்க்கைப் பயணத்தில் இஸ்லாமியத் "தென்றல்" வீசிய அனுபவங்களையும், இன்றைய முஸ்லிம்களின் நிலையையும் பிரபல அரப் நியூஸ் பத்திரிக்கையாளருடன் பகிர்ந்து கொண்டதை மொழியாக்கம் செய்து நாமும் பகிர்ந்து கொள்வோம்.

A.R.ரஹ்மான் சமீபத்தில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். மனதை மயக்கி இறை வழிபாட்டிலிருந்து தன்னியல்பை மறக்கச் செய்யும் எதையும், அது கலை என்ற பெயரில் சொல்லப்படும் இசையாகவே இருந்தாலும் இஸ்லாம் விரும்பவில்லை. (இதுபற்றி பிறகு பார்ப்போம்)



இந்திய மற்றும் உலக இசையில் தனக்கென தனி வெற்றி நாதங்களை இயற்றியவரின் உள்மன அகவலோசை இனிமையானது.

"இந்திய சினிமா உலகில் வெற்றி பெறுவதற்காக, தன் இஸ்லாமியப் பெயரை, இந்துப் பெயராக அல்லது வேறுபெயராக மாற்றிக் கொள்பவர்களிலிருந்து என் நிலை முற்றிலும் எதிர்மறையானது. திலீப்குமார் A.R.ரஹ்மான் ஆனதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்" என்கிறார்.

இது, A.R.ரஹ்மானுக்கு இரண்டாவது ஹஜ் யாத்திரை. இந்த முறை தன் தாயாருடன் வந்திருந்தார். மினா மற்றும் அரஃபாத்தில் இருந்த ஒவ்வொரு மணித்துளியையும் இறைவனை நினைவு கூர்ந்து "உள்மன சுத்திகரிப்பு" செய்து கொண்டிருந்தார். மேலும் அவர் சொல்வதாவது,

"இஸ்லாம் நவீனயுகத்திற்கேற்ற அமைதி,அன்பு, சகிப்புத்தன்மை கொண்ட மார்க்கம். நம்மிலிருக்கும் சிலரின் சகிப்புத்தன்மையற்ற செயல்களால் துரதிஷ்டவசமாக பழமைவாத முத்திரை குத்தப்பட்டு, அவர்களால் இஸ்லாம் களங்கப்படுத்தப் பட்டுள்ளது. இஸ்லாத்தின் உன்னத பிம்பத்தை மீள்பதிவுச் செய்ய நாம் (முஸ்லிம்கள்) முன்வரவேண்டும்" என வலியுறுத்துகிறார்.

"இஸ்லாமிய வரலாற்றைப் பற்றி அறியாமலும் அதன் உன்னத வாழ்வியல் நெறிகளை புறக்கணித்தும் இஸ்லாத்தின் மீது பிறருக்கு அச்சமேற்படுத்தும் இவர்களுக்கு எதிராகத் திரள வேண்டும்" என்கிறார்.

"முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்குள் நெடும்பயணம் செய்து, அயலாருடன் அன்பாயிரு!, அடுத்தவரை சந்தித்தால் முகமன் கூறு! இறைவனைத் தொழுவதுடன் ஈகையாக இரு! என்ற அதன் உன்னத அம்சங்களை அறிய வேண்டும்; மனித குலத்திற்கு நம் சேவை இன்றியமையாததாகும். மத/மனமாச்சாரியங்களுக்கு அப்பாற்ப்பட்ட மனிதநேயம் இன்றைய கலத்தின் கட்டாயம். இதில்தான் இஸ்லாம் நிலைத்து நிற்கிறது.

நம் நடத்தைகளின் பிரதிபலிப்பு இவ்வுலகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். முஹம்மது நபி (ஸல்...) அவர்கள் இஸ்லாத்தை பரப்ப நேர்மை,நன்னடத்தை,சகிப்புத்தன்மை என்ற ஆயுதத்தால் பரப்பினார். களங்கப்படுத்தப் பட்டுள்ள இஸ்லாத்தின் பிம்பத்தை மாற்ற இவையே தற்போதைய அவசியம்" என்றார்.

ஹஜ்ஜைப் பற்றி பேசும்போது, "அல்லாஹ் இதை நமக்கு எளிதாக்கியுள்ளான்; இதுவரை ஹஜ்ஜின் ஒவ்வொரு கிரியையும் நான் அனுபவித்துச் செய்துள்ளேன். இந்த ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக்கொள்வானாக!" என்றார். மேலும் சாத்தானுக்கு கல்லெறியும் நிகழ்வை, "உள்மனப்போராட்டத்துடன்" ஒப்பிட்டார்.

எனது பிறந்தநாள் பரிசாக (ஜனவரி-6) அல்லாஹ் இந்த ஹஜ் செய்யும் பாக்கியத்தை தந்துள்ளான். மேலும் மதினாவில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அடங்கியுள்ள பள்ளியில் இறைவனை முழுநேரம் வணங்கிய பாக்கியம், எதனோடும் ஒப்பிட முடியாத சந்தோசமாகும்" என்றார்.

மிகுந்த வேலைப் பழுவிற்கு மத்தியிலும் இறைவனை தொழுகிறேன். நான் பிஸியான இசைக்கலைஞனாக இருந்த போதிலும், இறைவனை தொழுவதை தவற விடுவதில்லை. ஐந்துவேளை தொழுகைகளையும் அதனதன் நேரத்தில் தவறாமல் தொழுகிறேன். இதனால் மன அழுத்தம் குறைந்து நிம்மதி கிடைக்கிறது. இது இறைவன் உலக்த்தில் மட்டுமல்ல; இறுதித்தீர்ப்பு நாளிலும் என்னுடன் இருப்பதாக நினைவூட்டுகிறது என்றார்.

1989 இல் தன் குடும்பத்தாருடன் இஸ்லாத்தில் இணைந்ததை நினைவு கூர்கிறார்."நான் மலேசியாவில் இருந்த போது, முதியவர் ஒருவர் என்கனவில் வந்து இஸ்லாத்தில் இணையும் படி சொன்னார். முதலலில் இதனை நான் பெரிது படுத்தவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் இக்கனவு வந்ததால், என் தாயாருடன் ஆலோசித்தேன். இஸ்லாத்தின் பால்தூண்டிய அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, முஸ்லிமாக அறிவுறுத்தினார். இவ்வாறாக இஸ்லாத்தை நோக்கிய என் பயணம் தொடர்ந்தது என்றார்.

"இஸ்லாத்தில் இணைவது பற்றிய என் தாயாருடனான (கஸ்தூரி என்ற கரீமா பேகம்)ஆலோசனை என் வாழ்வில் செய்யப்பட்ட மற்ற சாதாரன முடிவுகளைப்போலல்லாமல் தீர்க்கமான முடிவு; சற்று ஐயங்களுடன் என் மூன்று சகோதரிகளும் பிறகு இஸ்லாத்தில் இணைந்தனர். அவர்களுக்கான முன்மாதிராக என் இஸ்லாமிய வாழ்கை இருந்ததே காரணம்" என்கிறார்.

"எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய - இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும், அது வல்லமை மிக்க, புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள்." (குர்ஆன் 34:6 )

நன்றி: அரப் நியூஸ்

No comments: