Friday, October 28, 2005

பண்டிகைகளும் நல்லிணக்கமும் -2

பொங்கல், ஓணம்,புத்தாண்டுப் பண்டிகைகளைச் சொல்லலாம். இதை மற்ற மதத்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் இஸ்லாமியர்கள் இவற்றைக் கொண்டாடததின் மூலம் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கு எதிரானவர்கள் என்ற தோற்றம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என தனித்தனியாக கொண்டாடுவதை விட தமிழர்களாகிய நாம் பொங்கல் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடி உலகின் மற்ற மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாமே? என்ற
நியாயமான கருத்து முன்வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு கொள்கையும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கின்றன. அதனைப் பின்பற்றிக் கொண்டு எம்மதமும் சம்மதம் என்பது வாயளவில் நல்ல சித்தாந்தமாக இருந்தாலும் உளப்பூர்வமாக தங்கள் மத நம்பிக்கைகளை
இது போன்ற பொதுவான பண்டிகைகளில் திணித்து விடுகின்றனர். இதை தவிர்க்கவும் முடியாது.

எப்படியெனில் படைத்தவனைத் தவிர படைப்புகளை வணங்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலை. அதே நேரத்தில் மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவாக மாட்டான் என்பதும்
இஸ்லாத்தின் கோட்பாடு. இறைவனுக்குச் செலுத்தும் நன்றி வணக்க வழிபாடு சார்ந்ததாகவும், மனிதனுக்குச் செலுத்தும் நன்றி பொருள் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உழவர்களுக்கும், உழவில் ஈடுபடுத்தப்பட்ட கால்நடைகளுக்கும், விளைந்த பொருட்களையும் வணங்குவதை விட அவற்றைப் படைத்த அல்லாஹ்வை வணங்குவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாமியர்கள் பொங்கலைக் கொண்டாடவில்லை என்பதற்காக தமிழர் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று கருதக் கூடாது.

இஸ்லாம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திட அறிவுக்குப் பொருத்தமான வழியை சொல்கிறது.

"உங்கள் மார்க்கம் உங்களுக்கு; என் மார்க்கம் எனக்கு" (109:6)

என திருக்குர்ஆன் கூறுகிறது. அதாவது ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது மதத்தைப் பேணி நடந்து கொள்ளட்டும். அதே சமயத்தில் மற்ற மதத்தவர்கள்
தங்கள் மதத்தின் படி நடப்பதை தடுக்கவோ/குறுக்கிடவோ கூடாது என்ற இக்கோட்பாட்டில் எவ்வித முரண்பாடும் இல்லை. இதை நடைமுறைப் படுத்தும்போது உண்மையான மத/சமூக நல்லிணக்கமும் கடை பிடிக்கப்படும்.

மற்றவர்களின் வழிபாட்டை தடுக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் சவூதியில் இந்துக்கள் கோவில் கட்டி வணங்குவதற்கும், கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் ஜெபம் செய்யவும் அனுமதி
மறுக்கப்படுகிறதே என்ற குற்றச்சாட்டிற்கு, இஸ்லாம் எவ்விதத்திலும் காரணமில்லை, அது சவூதியின் அரசியலமைப்பும், சட்டதிட்டமும் காரணம் என்பதோடு மேற்கொண்டு விவாதிக்காமல், இந்தியாவில்/தமிழ்நாட்டில் எப்படி சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பது எனப் பார்ப்போம்.

மாமிசம் சாப்பிடும் முஸ்லிம்களுக்கு அண்டை வீட்டு இந்து, மாமிசம் அல்லது தீபாவளி, ஆயுத பூசை போன்ற பண்டிகைகளின் படைக்கப்பட்ட பலகாரங்களை அன்பாக கொடுத்த போதிலும் ஏற்பதில்லை என்ற
குற்றச்சாட்டு உள்ளது.

முஸ்லிம்கள், அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி அறுக்கப்பட்ட உயிரிணங்களை மட்டுமே உண்ண வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. இந்த கட்டளையின் காரணமாகவே மற்றவர்கள் அறுப்பதை உண்ண மறுக்கின்றனரே தவிர காழ்புணர்வோ அல்லது வேறு ஜாதியக் காரணங்களோ அல்ல.

கடவுளுக்கு எந்தத் தேவையும் இல்லை. கடவுளுக்காக எந்த பொருளையும் படைக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் அடிப்படை. இதில் முஸ்லிம்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் படையல்
செய்யப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாம் என இஸ்லாம் முஸ்லிம்களை வலியுறுத்துகிறது.

சைவம் சாப்பிடும் ஒருவர் எப்படி அசைவ உணவை ஏற்க மறுப்பாரோ அதே அளவுகோல்தான் முஸ்லிம்களுக்கும் வைக்க வேண்டும். அடுத்தவர் அன்பாக கொடுப்பதை ஏற்கவில்லை என்பதற்காக கொடுத்தவரை அவமதித்து விட்டார் என அர்த்தமல்ல. உண்மையில் சைவம் சாப்பிடுபவரிடம் அசைவ
உணவைக் கொடுப்பதுதான் அவமதிப்பு.

இந்த வேறுபாட்டை உணர்ந்து கொண்டால், இஸ்லாம் தமிழர்களுக்கும் பிற சமயங்களுக்கும் எதிரானதல்ல என்ற உண்மை புலப்படும்.

ஆக சமூக/சமய நல்லிணக்கத்திற்கு அவரவர் தத்தம் வழிபாடுகளையும் வணக்கங்களையும் அடுத்தவரை பாதிக்காதாவாறு அமைத்துக் கொண்டால் மட்டுமே சாத்தியம்.

Monday, October 24, 2005

பண்டிகைகளும் நல்லிணக்கமும் -1

பண்டிகைகள் - அந்தந்த மத நம்பிக்கையாளர்கள் தங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக சந்தோசமாகக் கொண்டாடப் படுவதற்காக மதங்கள் ஏற்படுத்திய வழிமுறை. கிறிஸ்துமஸ்,புத்தாண்டு, புனிதவெள்ளி என கிறிஸ்தவர்களும் தீபாவளி,ஆயுத பூசை என இந்துக்களும் ரம்ஜான், பக்ரீத் என முஸ்லிம்களும் ஒவ்வொரு வருடத்திலும் சில நாட்கள் கொண்டாடுகின்றார்கள்.

இவையல்லாமல் பொங்கல்,ஓணம்,யுகாதி போன்ற சமூக/இன ரீதியான பண்டிகளும் கொண்டாடப் படுகின்றன. அனைத்து மத பண்டிகைகளின் நோக்கமும் மக்கள் சந்தோசமாகவும் நன்றியுடையவர்களாகவும் இருக்க
வேண்டும் என்பதே.

உண்மையில் அனைத்து பண்டிகைகளும் மக்களுக்கு சந்தோசத்தைக் கொடுக்கிறதா? என்று நடுநிலையாக சிந்திக்க வேண்டியது நம் கடமையாகும்.

முஸ்லிம்களின் பண்டிகைகளின் போது குர்பானியின் போது உணவுக்கு ஏற்ற கால்நடைகளை இறைவன் பெயரால் அறுத்து தானும் உண்டு, உறவினர், அண்டை வீட்டார் மற்றும் ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். இது பசுவை தெய்வமாக வணங்குபவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை.

கிறிஸ்தவர்களின் பண்டிகையின்போது மது அருந்துதல், ஆண்-பெண் கட்டுப்பாடின்றி ஆடிப்பாடுதல் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு ஈடுபாடில்லை. அர்த்தமற்ற கேளிக்கைகளையும், அனாச்சாரங்களையும்
இஸ்லாம் அவர்களுக்கு தடுத்துள்ளதால் ஒரு சாராருக்கு மகிழ்சியான பண்டிகை இன்னொரு சாராருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.

இந்துக்களின் பண்டிகையின் போது செய்யப்படும் சில சடங்குகளும், மேட்டுக்குடி இந்துக்களில் சிலர் மது அருந்தியும் இன்னும் பிற கேளிக்கைகளிலும் ஈடுபட்டு தங்கள் பண்டிகளைகளைக் கொண்டாடுகின்றனர்.

இதுவும் இஸ்லாமியருக்கு ஏற்புடையதாக இல்லை. இப்படி ஒருவர் சந்தோசமாகக் கொண்டாடும் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் இன்னொருவருக்கு கொண்டாட்டத்தையும் சந்தோசத்தையும் கொடுக்க முடியவில்லை.

சரி, அனைத்து மக்களும் பொதுவாக ஒரு பண்டிகையைக் கொண்டாடலாமே என்ற வாதம் நியாயமாகப் படலாம். பிற மத வழிபாடுகளற்ற அல்லது பிறர் மதக் கொள்கையுடன் ஒத்துவராத பண்டிகைகள் சாத்தியமா? எனப் பார்ப்போம்.

தொடரும்...

Thursday, October 20, 2005

அறிமுகம்

தமிழ் நெஞ்சங்களுக்கு, இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக!

தமிழ்மணத்தின் மூலம் "நல்லடியார்" என அறியப்பட்ட நான் <<எதிரொலி>> என்ற வலைப்பூவில் இஸ்லாம் மார்க்கம் பற்றியும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றியும் சில எழுதிய அவதூறுகளுக்கு விளக்கம் சொல்லும் கடமையில் எழுதி வந்தேன்.

எனது வலைப்பூ பதிவுகள் http://athusari.blogspot.com என்ற முகவரியில் செயல்பட்டு வந்த போழ்தும், தமிழ்மணம் நிர்வாகிகளின் புதிய விதிமுறைகள் மதம் சார்ந்த அல்லது துவேச கருத்துக்கள் சசத்தியமுள்ள வலைப்பூக்களை திரட்டுவதில்லை என்ற புதிய விதியால் எனது வலைப்பூவும் பட்டியலிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான வலைப்பூக்களும் பட்டியலிலிருந்து நீக்கப்படுள்ளன.

தள நிர்வாகிகளின் இத்தகைய கட்டுப்பாடு தேவையானது என்பதைச் சொல்லிக் கொள்ளும் இதே நேரத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மொழியால் தமிழன்! தேசத்தால் இந்தியன்! மதத்தால் இஸ்லாமியன்! உணர்வால் மனிதன். இதுதான் என் நிலைப்பாடு.

இணையத்தில் சாதாரண வாசகனாக இருந்த என்னை வேதனைப்படுத்தியது ஒன்று உண்டென்றால், இஸ்லாத்திற்கு எதிரான வலைப்பூக்கள். இதுவரை தமிழல்லாத மொழிகளில் அது போன்ற தளங்கள் உலகலாவிய அளவில் இயங்கி வந்தபோது எழாத வருத்தம் சக தமிழர்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்த முயலும் சில சக்திகளின் துவேச எழுத்துக்களால் எழுந்தது.

மத நம்பிக்கை என்பது மனித நல்வழிப்படுத்த தோன்றியவை என சொல்லும் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்று, இதுவரையிலும் சகமனிதர்களுடன் நண்பணாய், அண்டை வீட்டுக்காரணாய், சக ஊழியனாய் இருந்து வருகிறேன். இனியும் இதில் மாற்றமிருக்காது.

என் நம்பிக்கையை சிலர் ஏளனப்படுத்தியதாலும் அவதூறாக எழுதியதாலும் அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டி மட்டும் இஸ்லாம் சம்பந்தமாக எழுதி வந்தேன். நான் இஸ்லாமிய பிரச்சாரகனோ அல்லது எழுத்தாளனோ அல்ல. நான் அறிந்த உண்மைகளை பிறருக்கு புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்காகத்தான் எழுதி வருகிறேன்.

என் மதநம்பிக்கை தாக்கப்படும்போது, அதற்கு தகுந்த விளக்கம் கொடுக்காமல் சினிமா,அரசியல்,பொழுதுபோக்கு என்று என்னால் எழுத முடியவில்லை. முடியவில்லை என்று சொல்வதை விட எழுத விடவில்லை என்பதே உண்மை.

இனி என் மத நம்பிக்கைகளின் மீதான அதூறுகளுக்கு தமிழ்மணத்தில் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய விளக்கங்கள் அல்லாமல் பொதுவான சமய/சமூக சிந்தனைகளை
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த முடிவில் என் எழுத்தார்வம் மற்றும் இதுவரை பெற்ற தமிழிணைய நண்பர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல நோக்கமுமே என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி...