Sunday, February 12, 2006

பிப்ரவரி-14 : கலாச்சார/பண்பாட்டுச் சீரழிவு தினம்

தினம் தினம் ஒரு கொண்டாட்டம். இது 'கே' டிவி விளம்பரமல்ல! உலகமயமாக்கப்பட்ட சாமான்யனின் வாழ்வில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயரிட்டு, அந்தத்த துறைசார் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள முதலாளியத்துவம் கையாண்ட வணிக யுக்திகளில் ஒன்றுதான் காதலர் தினம்.

'காதல்' என்ற உணர்வு அனைத்து உயிரினத்திற்கும் பொதுவானது. காதல்/நேசம்/அன்பு/பாசம் இப்படி எந்த பெயர் கொண்டழைத்தாலும் இதன் அர்த்தம் மாறுவதில்லை.

அன்னையர் தினம், நண்பர்கள் தினம் என்று எத்தனையோ தினங்கள் அன்பை வெளிப்படுத்தக் கொண்டாடப் பட்டாலும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு இருக்கும் உலகலாவிய முக்கியத்துவமும் எதிர்ப்பும் வேறு தினக் கொண்டாட்டங்களுக்கு இல்லை.

காதலர் தினக் கொண்டாட்டங்களை எதிர்ப்பவர்கள், அன்புக்கும் காதலுக்கும் எதிரிகளா? இல்லை! ஆணும் பெண்ணும் சமூக அங்கீகாரமற்ற அநாகரிக உறவு கொள்வதற்கும், கொண்டாட்டம் என்ற பெயரில் கலாச்சார/ பண்பாட்டுச் சீரழிவிற்கும் வழிவகைச் செய்வதையும்தான் எதிர்க்கிறார்கள்.

("கலாச்சாரக/பண்பாட்டுக் காவலர்கள்" என்ற போர்வையில் ஆர்ப்பரிக்கும் வன்முறைக் கும்பலின் நோக்கம், இக்கொண்டாட்டங்களுக்கு கிறிஸ்தவ பின்னனி இருப்பதாலும், கலர்ப் பொடித்தூவி மகிழும் "ஹோலி,ரக்ஷ்சா பந்தன்" கலாச்சாரத்திற்கு! எதிரானது என்ற சுய நலமத்தாலும்தான். அதைப் பற்றிய விவாதம் இங்கு அவசியமில்லை)

இந்தியாவில் கடந்த 10-20 வருடங்கள் வரை அறிந்திராத "காதலர் தினம்" எங்கிருந்து வந்தது? இதற்கு முன் இந்தியர்கள் காதலிக்காமலா இருந்தார்கள்? இரு உள்ளங்களுக்குள் இருக்க வேண்டிய காதலை ஒயின் ஷாப்பிலும், கேளிக்கை நடன விடுதியிலும், கடற்கரையிலும் கடை விரித்துக் கொண்டாடும் கலாச்சாரம், இறக்குமதி செய்யப்பட்ட அந்நிய ஒழுக்கச் சீர்கேட்டின் பலனல்லவா?

ஒரு இணையதமிழ் குழுமத்தில் "காதலர் தினம் தமிழருக்குத் தேவையா?"
என்ற விவாதத்தில் அருமையான கருத்துப் பரிமாற்றத்தைக் காண நேர்ந்தது.

"கல்வி, செல்வம், வீரம், விழுமியம், காதல் என்று தன் வாழ்வை வளப்படுத்திய தமிழன் அவற்றை மதிக்கவும் வளர்க்கவும் கற்றுக்கொடுக்க மறுக்கவில்லை..மறக்கவில்லை...!

ஆனால் நாம் எப்போதுமே காதல் என்ற ஒன்றுக்காக விழா எடுத்து காலத்தை வீணடிக்கவில்லை...செலவை ஊக்குவிக்கவில்லை..காதல் பண்டமல்ல பரிமாறி மகிழ என்று உணர்த்தவும் இல்லை..அதைக் கேளிக்கையாக்கி காட்டவும் இல்லை...மனிதனுக்குள் உருவாகும் ஒரு உன்னத உணர்வாகவே காட்டி வந்தோம் தொன்றுதொட்டு...! இதற்கு தமிழ் இலக்கியங்கள் சாட்சி"

காதல் அது ஒருவன் ஒருத்திக்குள் உருவாகும் உணர்வுநிலைப் பரிமாற்றத்தின் விளைவு...அதை அவளும் அவனும் தான் சரிவர உணர முடியும்...! அதை ஏன் மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும்...அதற்கு ஏன் ஒரு விழா...திருநாள்...இதைக் கொண்டாடாமல் விட்டால் காதல் என்ன மனிதனுக்குள் உயிரிக்குள் உதயமாகாமலா விட்டிடும்...???!

காதல் புனிதம் ஆவதும் அசிங்கமாவதும் காதலர் தினம் கொண்டாடுவதால் அல்ல...தினம் தினம் உங்கள் உங்கள் மனம் எடுக்கும் நிலை சார்ந்ததே அது...! பூக்கள் கொடுப்பதும் பரிசு கொடுப்பதும் பொது இடத்தில் முத்தம் கொடுப்பதும் கட்டிப்பிடிப்பதும் காதலைப் புனிதமாக்காது...அது காதலும் அல்ல..!

காதல் அகத்தோடு இப்பது உடல் கூட அதை வெளிக்காட்டாத போது நீங்க ஏன் அதை கேளிக்கையாக்குகிறீர்கள்...! இன்று பலரும் காதலர் தினம் கொண்டாட என்று ஒரு சோடி தேடும் நிலைக்கு வந்துள்ளனர்... இதுதான் காதலோ...???!

மேற்குலக வியாபாரிகளுக்கு ஜீவிய கால விளம்பரம் ஓட்ட கிடைத்த ஒன்றுதான் காதல்... தவறாமல் பிடித்துக்கொண்டுள்ளார்கள்...உலகம் பூராவும் நல்ல காதல் வியாபாரம் நடக்கிறது...! காதல் இன்று வியாபாரமாகி இருப்பது இத்தினத்தால் மேலும் விளம்பரப்படுத்தப்படுகிறது...! இது காதலைப் புனிதப்படுத்தவில்லை களங்கப்படுத்துகிறது...!

ஆண் - பெண் காதலுக்கும் பாசம் கலந்த அப்பா அம்மா சகோதரங்கள் மீதான காதலுக்கும் இடையே உணர்வு ரீதியான தெளிவான வேறுபாடுண்டு...! காதலை வெளிப்படுத்த காதல் கொண்டவங்களுக்கு நாள் நட்சத்திரம் அவசியமில்லை...! காதல் ஒரு நாளுக்குரியதுமல்ல...அது வாழ்வின் எல்லை வரை தொடர வேண்டியது...! ஏன் புறத்தே வேசங்களால் வெளிக்காட்டாமலே காதலை அன்பால் காட்டிக் கொண்டே இருக்கலாம். அதுதான்... யதார்த்தமானது... உண்மையானது...!

காதலுக்கு... அன்பைப் பொழிய ஏன் ஒயின் குடிக்கவேணும்...இல்ல பியர் அடிக்க வேணும்...இல்ல...இப்படிப் பலதும் பண்ண வேணும்... காதல் மகிழ்ச்சி என்பது அன்பைப் பரிமாறுவதால் உளத்தால் எழுவது...அதற்கேன் வெளிவேசம்....தேவையில்லாத வேடங்கள்...!

சிலர் இதே தினத்தை ஏதோ காதலுக்கு சுதந்திரம் தரும் தினமாகக் கருதி...பச்சை நிற ஆடைகள் அணிந்து கட்டாயக் காதல் வரவழைக்கினமாம்...இன்னும் சிலர் செய்ய வேண்டிய சேட்டைகளை செய்து போட்டு இது லவேர்ஸ் டே எதுக்காடி இருக்கு என்றாங்க...இதுதான் காதலர் தினம் தரும் விளைவுகளோ...இதுதான் புனித நாளின் பணிகளோ...!

இப்போ தியாகிகள் நாளை கூத்தும் கும்மாளமுமா அடிக்கச் சொன்னா அதை அங்கீகரிப்பீங்களோ... அதேபோற்தான் காதலுக்காய் தியாகம் பண்ணினவன் காதலுக்கு மரியாசை செய்யச் சொன்ன நாள் தான் இது...ஆனா...அதுவா நடக்குது...இதுதான் மரியாதை செய்யும் நடைமுறைகளோ...??!
மனித உணர்வுகளில் காதல் இன்றியமையாதது. உயிர்களுக்குள் காதல் பரிமாற்றம் அவசியம். ஆனால் திருமணம் என்ற சமூக அங்கீகாரத்துடன் என்பதே இஸ்லாமிய/இந்திய/தமிழர் பண்பாடு.

பிப்ரவரி-14 ஆம் தேதியை உலகம் முழுவதும் காதலர் தினமாக அனுஷ்டிக்கிறார்கள். ஆனால் பிப்ரவரி முதல் நாளிலிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் படுகின்றன. புத்தாண்டையாவது நள்ளிரவில் கொண்டாடுவதில் கொஞ்சம் நியாயம் உண்டு. காதலர் தினக் கொண்டாட்டங்களும் இரவில் நடப்பது என்பது ஏன்? என்று சிந்தித்தால் இதன் உள்நோக்கம் புலப்படும்.

ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்தால் எப்படி அன்பை வெளிப் படுத்திக் கொள்வார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. MTV வின் வருகைக்குப் பிறகு காதலர் தினக் கொண்டாட்டங்கள் தரம் தாழ்ந்தன. மது அருந்திவிட்டு ஆணும் பெண்ணும் கும்பலாக நெருக்கியடித்து உரசிக் கொண்டும், ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டும், முத்தமிட்டும் ஆடி மகிழ்வதுதான் காதலுக்கு மரியாதையா?

காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு வக்காளத்து வாங்குபவர்கள், தங்கள் பிள்ளைகள் இப்படி பொது இடங்களில் அநாகரிகமாக ஒழுக்கக்கேடாக நடப்பதை அனுமதிப்பதில்லை. காதலுக்கு மரியாதை என்ற பெயரில் மறைந்திருக்கும் தங்களுன் உள்மன வக்கிரத்தைக் காட்டவே எண்ணமே காதலர் தினக் கொண்டாட்டங்கள் என்றால் மிகையில்லை.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக் கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (குர்ஆன் 17:32)

No comments: